states

img

3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்

3 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இன்று மாலை 6 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.  

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் 2வது ஏவுதளத்திலிருந்து மாலை 6 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 25 மணிநேர கவுண்டவுன், நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. 365 கிலோ எடைகொண்ட டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள், அதிக தெளிவுடன் ஒரே நேரத்தில் பல கோணங்களில் புவியை படமெடுக்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் இரண்டாம் கட்ட நிலையை வெற்றிகரமாக அடைந்து, மூன்றாவது கட்ட நிலையையும் கடந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அறிவித்தனர். பின்னர், நியோ-சாட் மற்றும் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 2.8 கிலோ எடையுள்ள ஸ்கூப்-1 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது.  

இதற்கிடையில், ஏவுதலின்போது செயற்கைக்கோள்களை திட்டமிட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்திய பின்னர் பிஎஸ்எல்வி ராக்கெட்டின் இறுதி பாகமான பிஎஸ்4 பகுதி உதவியுடன் சில ஆய்வு கருவிகளும் புவி வட்ட பாதைக்கு அனுப்பப்பட உள்ளன.